2017/08/25

பல்கொட்டிப் பேய்



14

13◄

        லிமேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம். எனக்கு எதிரே ஸ்ரீராம். அவன் பின்னால் ரமேஷ். அவனைச் சுற்றி ஜாமக்கூழ் மக்கள். ரமேஷுக்குப் பின்னால் விளக்கு விசை. ஸ்ரீராமையும் ரமேஷையும் கவனித்தபடி ஏட்டு வாசலில் நின்றிருந்தார். ஸ்ரீராமின் சைகை தொடர்ந்து நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். மனதுள் இரண்டு அவசர ப்ளேஷ்பேக்.

ப்ளேஷ்பேக் ராமு: ஸ்ரீராம் எங்களைக் கூட்டிப் பேசினான் என்றேனே, இதான் விஷயம். உக்கிராசலத்தின் திடீர் மறுப்பும் ஏட்டு காதுபட அவனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பேசியதும் நாடகம் என்றான். உக்கிராசலம் ஏற்கனவே தலைப்பல்லை பெயர்த்து வைத்துவிட்டான் என்றும் சமயம் பார்த்து ஜாமக்கூழ் கூட்டத்தில் தலைபல்லை தட்டிக்கொண்டு போகலாம் என்றும் அன்று காலையே சொல்லிவிட்டதாகச் சொன்னான். “இந்தாடா” என்று ரமேஷிடம் கொடுத்தான். மஞ்சள் குங்குமம் பூசிய பெரிய உருளைக்கிழங்கு. “உக்கிராசலம் கொடுத்தான். தலைப்பல் அபேஸ் பண்ணிட்டு அந்த இடத்துல இதை வச்சுரு” என்றான்.

“ஏன்.. நீ செய்யேண்டா?” என்றான் ரமேஷ்.

“உனக்குத்தானே பேய் பிடிக்கும் அடிக்கடி? அதனால நீ செஞ்சா நாம மாட்டிக்கிட்டாலும் சாக்கு சொல்லிடலாம்ல?”

“எவண்டா சொன்னது எனக்கு அடிக்கடி பேய் பிடிக்கும்னு?”

“உக்கிராசலம் தான். ஏட்டு கிட்ட அப்படிச் சொல்லிருக்கான்.. நீ பேய் பிடிச்சு அன்னிக்கு அவரைப் பளார்னு அறைஞ்சேனு அவர்ட்ட சொன்னதா சொன்னான்.. அட்ஜஸ்ட் பண்ணிக்க.. பல் திருட்டுக்கும் வசதியாப் போச்சு..”

“அடப்பாவிகளா.. நீங்க இருக்குறப்ப எனக்கு எதுக்குடா எதிரிங்க?”

ப்ளேஷ்பேக் சோமு: மசாலா பால் சாப்பிடும் பொழுது தலைப்பல் திருடுவது பற்றித் திட்டமிட்டோம். மேடைக்கு எதிரெதிரே உட்கார்ந்து ஒருவர் ஏட்டைக் கவனிக்க வேண்டுமென்றும், ரமேஷ் பேய் வந்தாற்போல் ஆடத்தொடங்கியதும் ஸ்ரீராம் ஐந்து நொடிகளுக்கு விளைக்கை அணைக்க வேண்டுமென்றும், நான் அந்த சந்தடியில் உருளைக்கிழங்கை வைத்துவிட்டுத் தலைப்பல்லை எடுக்க வேண்டுமென்றும் திட்டம். “நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றது பல்கொட்டி. “ஏட்டு எதுக்கும் மசியாம நம்மளைத் துரத்தவோ தடுக்கவோ வந்தா அவர் தலையில ரெண்டு போடு” என்றான் ரமேஷ் கடுப்புடன்.

“ஏ பல்கொட்டி.. பல் கிடைச்சதும் எங்களை பழி கிழி வாங்கணும்னு நினைச்சே நாங்களே செத்து வந்து உன்னைப் பழி வாங்குவோம்.. எப்பவுமே பல் இல்லாம கிடக்க வேண்டியதுதான்” என்றான் ஸ்ரீராம்.

“அய்ய்ய்ய்ய்ய்யோ.. வேணாம்.. இல்லையில்லை” என்றபடி மசாலா பால் க்ளாசைக் கீழே வைத்தது பல்கொட்டி. கல்லாக்காரர் எங்கள் பேச்சைக் கேட்டு நடுங்கினாரா அல்லது அந்தரத்தில் ஆடி வந்த பால் க்ளாசை கண்டு நடுங்கினாரா தெரியவில்லை. “பழி வாங்குற எண்ணமே இல்லே.. வயசான பேய் பாவம்பா.. கருணை காட்டுப்பா.. ஏட்டைக் கவனிக்கணும் அவ்ளோ தானே?”.

        திட்டமிட்டபடி ரமேஷ் மெள்ள முனகத் தொடங்கினான். பிறகு “ஆத்தா” என்று விட்டு விட்டு உறுமத்தொடங்கியதும் கூழ்மக்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். எத்தனை பேயோட்டம் பார்த்திருப்பான்? அசத்தலாக நடித்தான். தோளைக் குலுக்கி ஆத்தா ஆத்தா என்று ஆடத்தொடங்கினான்.. மக்கள் கொஞ்சம் பீதியுடன் பரவி விலகத் தொடங்கினார்கள். உட்கார்ந்தபடியே நான் பீடத்தின் அருகில் சென்றேன். உருளைக்கிழங்கை கையிலெடுத்துத் தயாரானேன்.

ஸ்ரீராம் சட்டென்று விளக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு எரிந்தது. என் கையில் உருளைக்கிழங்கு இருப்பதைப் பார்த்து ரமேஷ் ஓவென்று கூச்சலிட்டு ஆடினான். ஸ்ரீராம் மறுபடி விளைக்கை அணைத்தான். ஐந்து நொடிகள். விளக்கு திரும்பியது. என் கையில் மறுபடி உருளைக்கிழங்கு. ரமேஷுக்கும் ஸ்ரீராமுக்கும் கடுப்பு. ஒரு சின்ன விஷயத்தை செய்யமுடியலியா என்று ஸ்ரீராம் என்னைக் கண்ணால் எரித்தான்.

என் கஷ்டம் எனக்குத் தானே தெரியும்? ஸ்ரீராம் சொன்னபடி உக்கிராசலம் தலைப்பல்லைப் பெயர்த்திருப்பான் என்று நம்பி அதை எடுத்தால்.. வந்தால் தானே? கை வழுக்கி வழுக்கிப் போனதே தவிர பல் அசையவில்லை. நாலைந்து முறை வழுக்கியதும் புரிந்தது. தலைப்பல்லைப் பெயர்த்து வைப்பதற்கு பதில் பீடத்தின் மேல்தட்டையே பெயர்த்து வைத்திருக்கிறான் மடையன். பீடத்தை தூக்கி எடுக்கவும் முடியவில்லை. அப்படியே எடுத்தாலும் அந்த இடத்தில் உருளைக்கிழங்கையா வைக்க முடியும்?

ரமேஷ் ஆடிக்கொண்டிருந்தான். “ஆத்தா பல்லைப் பிடுங்கித்தரச் சொல்லுதுடா பேராண்டி..” என்றான் என்னை இடித்தபடி.

நானும் ஆடத்தொடங்கினேன். “பல்லுக்குப் பதில் பீடத்தை பேத்து வச்சிருக்காண்டா பேராண்டி..”

“பீடத்தைத் தூக்கிப் பாரேண்டா பேராண்டி..”

“கிண்டலா இருக்குதாடா பேராண்டி..”

ஏட்டு அவசரமாக கூட்டத்தைப் பிரித்து உள்ளே வரத் தொடங்கியதைப் பார்த்த ரமேஷ் ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டு பக்கத்தில் இருந்தவர்களை இடித்து வேகமாக ஆடத்தொடங்கினான். ஆனால் ஏட்டு எங்கள் அருகே வந்து நின்று விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு விட்டார். பீடத்தின் தலை நகர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். தன் கையிலிருந்த விசிலை எடுத்து ஊத முற்பட்டபோது திடீரென்று ஆகாயத்தில் உயர்ந்தார். பிறகு பொத்தென்று விழுந்தார். மீண்டும் ஆகாயத்தில் எழுந்தார். மறுபடி பொத்தென்று விழுந்தார்.

உக்கிராசலம் சட்டென்று கோதாவில் இறங்கி ஏட்டை ஒரு வேப்பிலைக் கொத்தால் ஓங்கி அடித்தான். “மலையேறு ஆத்தா மலையேறு.. மலையேற ஆத்தா என்னா கேக்குது?”

“பல்லு கேக்குதுடா பேராண்டி ஆத்தா பல்லு கேக்குதுடா” என்று ரமேஷ் குத்தாட்டம் ஆடினான்.

நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஏட்டு பீடத்தை அப்படியே தூக்கினார். கூட்டம் அலறி விலகியது. ரமேஷ் ஆத்தா ஆத்தா என்று உணர்ச்சிவசப்பட, ஏட்டு தரையிலிருந்து நாலடி எழும்பி பீடத்தை தூக்கிக் கொண்டு வெளியே போனார். உக்கிராசலம் வேப்பிலைக் கட்டோடு ஏட்டைத் துரத்தினான். தொடர்ந்து ரமேஷ். தொடர்ந்து நான். ரயில்பெட்டி போல் என்னைத் தொடர்ந்த மக்கள் பக்தி வெறியில் மெய்மறந்து ஆத்தா ஆத்தா என்றனர்.

பனைமரம் அருகே ஏட்டு படாலென்று பீடத்தைத் தரையில் எறிந்தார். சுக்கலாக உடைந்த பீடத்தைச் சுற்றி வந்து ஆடினார். மயங்கி விழுந்தார். ஜாமக் கூழ் மக்கள் பரவசத்தில் தங்களை மறந்தனர். ஏட்டைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

“வாங்க போவோம்” என்று பல்கொட்டி என்னை அவசரமாக இடித்தது. ரமேஷை இழுத்துக் கொண்டு கூட்டத்திலிருந்து விலகினேன். ஸ்ரீராம் ஏற்கனவே தெருமுனையிலிருந்தான்.

        “என்னடா ஆச்சு?” என்றான் ஸ்ரீராம்.

“பல்லைப் பேத்து வைடானா பீடத்தைப் பேத்து வச்சிருக்கான் பீடை” என்றான் ரமேஷ்.

“என்னால அதை நவுத்தக் கூட முடியலிடா.. ஏட்டு வேறே வந்துட்டான்.. அதான் பல் கொட்டியைக் கூப்பிட்டேன்.. அது என்னடானா ஏட்டை ஒரு அடி அடிச்சு கவுத்திடுச்சு” என்றேன்.

“நீங்க தானேப்பா சொன்னீங்க.. ஏட்டை அடிக்கணும்னு..? அதான் மொதல்ல அடிச்சேன்.. அப்புறம் தான் கவனிச்சேன் நீ என்ன சொல்றேனு.. உடனே ஏட்டு கைல பீடத்தை வச்சு அவரை அப்படியே அந்தரத்துல தூக்கிட்டு சுத்தினேன்.. உங்களை நம்பினா எனக்குப் பல் கிடைச்ச கதைதான்.. பீடத்தைப் பேத்துட்டதினால எனக்கும் சிக்கல் இல்லாம போச்சு.. வெளில போனதும் நொறுக்கிட்டேன்.. பல்லை எடுத்துக்கிட்டேன்..”

“இருந்தாலும் போலீஸை அடிக்கறதுனா பல்கொட்டிக்கு ரொம்ப இஷ்டம்..ஆளை ஒரு தட்டு தட்டச்சொன்னா இப்படியா துணி மாதிரி துவைக்கிறது? ஏட்டுக்கு மயக்கம் தெளிஞ்சதும் நம்மளைப் பிடிக்க வருவான்.. அதுக்குள்ள நாம ஓடிறணும்.. ” என்றான் ரமேஷ்.

“எதுக்கு ஓடணும்?” என்றான் ஸ்ரீராம். “பீடத்தைத் தூக்கிட்டுப் போய் உடைச்சது ஏட்டுதான்னு எல்லாரும் சாட்சி சொல்வாங்க.. பரவாயில்லே பல்கொட்டி.. உனக்கும் கொஞ்சம் மூளை இருக்குது போல. குட். காரியம் ஆயிடுச்சில்லே? நடையக் கட்டு”.

        மறுநாள் காலை நானும் ரமேஷும் மும்பை கிளம்பினோம். ஸ்ரீராம் பெங்களூர் கிளம்பினான். பல்கொட்டி எங்களை விமான நிலையத்தில் வழியனுப்பி “நான் உங்களை மறக்கவே மாட்டேன்” என்றது.

“அய்யயோ..நீ வேறே... மொதல்ல எங்களை மறந்து தொலை.. இனிமே எங்க பக்கமே திரும்பிப் பார்க்காதே” என்றான் ரமேஷ்.

என் பாஸ்போர்ட்டை சரிபார்த்துக் கொண்டிருந்த செக்யூரிடி திடீரென்று பாஸ்போர்ட் காற்றில் பறப்பதைப் பார்த்து அலறினான். தாவிப் பிடித்து என் கையில் கொடுத்து “மாப் கீஜியே” என்றான். விமானத்தில் கூட்டம் இல்லை. உள்ளே நுழைந்து என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். பக்கத்து இருக்கை ஆசாமி அடிக்கடி நெளிந்து தன்னைத் தானே கன்னத்தில் அடித்துக் கொண்ட அதிர்ச்சியில் கலங்கிப் போயிருந்தான். நான் அவனைக் கவனிப்பது தெரிந்ததும் நெளிந்து “வயித்துவலி.. ஐ வில் கோ தேர்” என்றபடி எழுந்து பின்னால் போனான்.

பல்கொட்டி என் பக்கத்தில் இருப்பதை உணர்ந்தேன். “நீ எங்க பக்கமே வரக்கூடாதுனு சொன்னேன் இல்லே?” என்றேன். பல்கொட்டி பதில் சொல்லவில்லை.

முற்றும் - படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க!

2017/08/05

பல்கொட்டிப் பேய்



இது வரை: காஞ்சிபுரம் போயிருந்தனர் எங்கள் பெற்றோர். கோடை வெயிலை வீணாக்காமல் டெனிஸ் பந்தில் க்ரிகெட் விளையாடிக் கொண்டிருந்தோம் நான், என் தம்பி ஸ்ரீராம், என் பெரியம்மா மகன் ரகு, எதிர் வீட்டு நண்பன் ரமேஷ் நால்வரும். கீழே கிடந்த பந்தை எடுத்து நான் எறிய அதை ரமேஷ் பிடிக்கத் தொட்டதும் பந்து விர்ரென்று உயர்ந்து விரிந்து பேயாகச் சிரித்தது. எங்கள் வீட்டு வாசலையொட்டிய அம்மன் கோவில் பூசாரி தணிகாசலம் விவரம் கேட்டு 'அது பல்கொட்டிப் பேய்.. உங்களை விடாது' என்றார். கண்டிப்பாக அன்றிரவே பேய் எங்களைக் கடத்திச் சென்று தலைகீழாகத் தொங்கவிட்டு பல்லால் கொட்டி பலி வாங்கும் என்றார். அம்மனுக்கு பலி கொடுத்த ஆட்டு ரத்தம் தடவிய கயிற்றால் சுற்றி எங்களைக் காப்பாற்ற ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தார். அதன்படி நடந்து என் தம்பி ஸ்ரீராம் பல்கொட்டியின் வாயிலிருந்த தலைப்பல்லை தட்டி எடுத்துவிட்டான். உக்கிரமாக ஆர்ப்பரித்த பேயிடம் விடியும் வரை பல்லைத் தராதிருந்து முன்னூறு வருடம் கழித்து வந்தால் தருவதாகச் சொல்லச் சொல்லியிருந்தார் பூசாரி. மறதியிலோ பயத்திலோ முன்னூறுக்கு பதில் முப்பது என்று சொல்லிவிட்டான் ஸ்ரீராம். கறுவிக்கொண்டே எங்களை விட்டு விலகிய பல்கொட்டி சரியாக முப்பது வருடங்கள் காத்திருந்து நான் தங்கியிருந்த மும்பை ஹோட்டல் அறையில் விடிகாலை என்னைத் தட்டி எழுப்பியது. முப்பது வருடங்களில் பல்கொட்டி சோர்ந்தும் நொந்தும் போயிருந்தது. வரும் ஆடி அமாவாசைக்குள் நாங்கள் கூட்டாக அதனிடம் தலைப்பல்லைத் திருப்பாவிட்டால் பெருங்கேடு நேரும் என்றது.


13

12◄

        ன்னதான் அனுசரித்து பழக்க மரியாதையுடன் நடந்துகொள்வோம் என்று நினைத்தாலும் பல்கொட்டியின் பேய்க்குணம் மாறாது என்று புரிந்துவிட்டது. கெட்ட கனவை உருவாக்கியதுடன் நில்லாமல் இப்போது தலைகீழாகத் தொங்கியபடி இடியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது. கெட்ட கனவே மேல்.

கூகில் ட்ரைவில் சேமித்திருந்த என் பழைய தொடர்பு விவரங்களிலிருந்தும் லிங்க்டின் தேடலிலும் ஒருவழியாக ரமேஷைக் கண்டுபிடித்தேன். பல்கொட்டியைத் திட்டினாலும் ஒருவழியில் சந்தோஷம் தான். நட்பைப் புதுப்பிப்பது ஒரு புறம், பல்கொட்டியின் வருகையைச் சொன்னதும் அவன் எப்படி நடந்துகொள்வான் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இடுக்கண் கொடுப்பதாம் நட்பு.

குடும்ப நலத்திலிருந்து பக்கத்துத் தெரு வெறிநாய் மாரடைப்பில் இறந்தது வரை பேசிய ரமேஷ் பல்கொட்டி வருகையைச் சொன்னதும் ‘ராங் நம்பர்’ என்று வைத்துவிட்டான். மறுபடி முயற்சித்தபோது பெண்குரலில் மராத்தியில் பேசினான். பிறகு நாய் குரைப்பது போல். அதற்குப்பிறகு எடுக்கவே இல்லை. “இப்ப என்ன செய்ய? ரமேஷ் வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சுப் போவுறது?” என்றேன்.

“இங்கதான் பைகலாவில் இருக்குது, எனக்குத் தெரியும் வா போகலாம்” என்றது பல்கொட்டி.

“உனக்குப் பல்லுதான் இல்லே, மூளையுமா இல்லே? இதை மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல?”

“நீ மொதல்லயே கேட்டிருக்கலாம்ல? முப்பது வருசமா உங்களைப் பேயா சுத்தி சுத்தி வரேன்ல? எனக்குத் தெரியாதா?”

“அடப்பேவி!”

மேஷ் வீட்டுக்குப் போனபோது அவன் வேலைக்கார வேஷத்தில் “ரமேஷ் சாப் கா கர் நஹி.. பொலிஸ் இன்ஸ்பெக்டர் கா மகான்.. அப் ஆனேவாலா ஹை.. சலே ஜா” என்றான். பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு உள்ளே அனுமதித்தான். தலைப்பல் மீட்பு பற்றிச் சொன்னேன். பல்கொட்டியின் தலைப்பல் ஓட்டையில் விரல் விட்டு விளையாடிக்கொண்டிருந்த ரமேஷின் நாலு வயது பேரனை இழுத்து இழுத்து அருகில் வைத்தபடி மறுத்தான். பிறகு சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.

ஸ்ரீராம் சிரிக்கத் தொடங்கினான். “கெட்ட கனவு தானே? ஜமாய் மச்சி” என்று பல்கொட்டியைத் தட்டிக் கொடுத்தான். என் தம்பி எதற்குமே அலட்டாத வகை. அதுவும் தூக்கம் என்றால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியாது. பக்கத்து வீட்டில் இடி விழுந்து கருகும். இவன் சுகமாகத் தூங்குவான். கனவா? கனவில் வந்தவர்களுடன் பேசியபடியே தூங்குவான். கடைசியில் அவன் காலில் விழுந்தோம். வேறு வழியே இல்லை. மூத்தவர்கள் மூவர் (பேயை மூவரில் சேர்க்கலாமா?) அவன் காலில் விழுவதைப் பார்த்து மனம் மாறினான்.

      ஞாயிறு மாலை பம்மல் வந்தோம். கோவில் வெளிப்புறம் நன்கு மாறியிருந்தாலும் உட்புறம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முந்தைய தோற்றத்திலிருந்து மாறவில்லை. கோவிலில் இருந்த ஒன்றிரண்டு பெண்கள் எங்களைச் சந்தேகத்துடன் விசித்திரமாகப் பார்த்தபடி வெளியேறினார்கள். “ரமேஷ். வேஷம் போடாம வாடானு சொன்னா கேட்டியா? அதும் ஒரு முழத்துக்கு தாடி ஒட்டி வச்சிருக்கே.. பாரு, ஆடிக்காத்துல ஆடிக்காட்டுது” என்று இடித்தேன்.

பூசாரி வெளியே வந்து எங்களைப் பார்த்து சிரித்தான். “வாங்க.. என் பேரு உக்கிராசலம். கோவில் பூசாரி”

தணிகாசலத்தின் பேரனாக இருக்க வேண்டும். விவரம் சொன்னோம். கோவில் பின்புறம் இருந்த அவன் வீட்டுக்கு அழைத்தான். உள்ளே நுழைந்ததும் ஒருவித வேப்பிலை நடனமாடி எங்களைச் சுற்றி குங்குமம் தூவினான். ஒரு எலுமிச்சையை அசால்டாக கையால் திருகி எறிந்து வெளியே வீசினான். “பல்கொட்டி உங்க கூட இருக்குதா?” என்றான்.

“உக்கிராசலம்.. அது ஒண்ணும் பண்ணாதுபா” என்றேன். உடனடியாகத் தலைப்பல்லை எடுத்துக் கொடுக்கச் சொன்னான் ரமேஷ். “அடுத்த ப்ளைட்ல போவணும்பா..”

“முடியவே முடியாது. தாத்தா சாவுறப்ப விவரம் எல்லாம் சொன்னாரு. முப்பது வருசம் பொறுத்து வருவீங்கனாரு. பல்லைத் திருப்பினா பலி வாங்கும்னாரு.. அதான் அவுரே கோவில் பூசைபலி மேடைல பொதச்சு வச்சுட்டாரு. எடுக்க முடியாது.. பாருங்க இதைப்பத்திப் பேசுறப்பவே வெளில நிழலாடுறாப்புல இருக்குது”

"பொதைக்கலபா, பதிச்சு வச்சிருக்காரு.. சரியாச் சொல்லணும்" என்றான் ரமேஷ் தேவையில்லாமல்.

“உக்ரம்.. இங்க வாங்க” என்றான் ஸ்ரீராம். “அஞ்சாயிரம் பணம் தரேன்.. அப்புறம் இதையும் அன்பளிப்பா வச்சுக்குங்க” நேராக விஷயத்துக்கு வந்தான். தன் பையிலிருந்த இரண்டு அரை லிடர் ஷிவஸ் புட்டிகளை எடுத்துக் கொடுத்தான்.

தணிகாசலம் பரம்பரை அல்லவா? உக்கிராசலம் உடனே விழுந்தான். “புதன்கிழமை தானுங்க அமாவாசை? நீங்க போயிட்டு செவ்வா நைட்டு வாங்க. பேத்து எடுத்துருவம். அதுக்குள்ளாற எங்க பேயாத்தா கிட்டே ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்”

“பேயாத்தாவா? அது உங்க தாத்தாவுக்கு ஆத்தாவுக்கு ஆத்தாவாச்சேபா?” என்றான் ரமேஷ். “இன்னுமா சாவலே?”

“பேயாத்தாவுக்கு சாவு கிடையாது. செத்து தானே பேயாச்சு?” என்று நுட்பத்தை விளக்கினான் உக்கிராசலம்.

“போய்ட்டு வாங்க” என்று எங்களுடன் அவனும் வெளியே வந்தான். வீட்டு வாசலில் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஒரு ஏட்டு நின்றிருந்தார். “என்னா உக்கு? கோவில் சிலை திருட்டா? எல்லாம் கேட்டுட்டு இருந்தேன்.”

“அய்யயோ அப்படியெல்லாம் இல்லிங்க இன்ஸ்பெக்டர்” என்றான் ரமேஷ். இலவசமாக் கிடைத்த பதவி உயர்வுக்கு மயங்காத கான்ஸ்டபிள் நேர்மையுடன் ரமேஷைப் பார்த்து “நீ யார்யா? ஐசிஸா? தாடி வச்சிட்டு ஒருத்தன் கோவில்ல திரியறானு அந்த பொம்பளிங்க சொன்னது உன்னியத்தானா?”

“ஏட்டய்யா.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?” ஸ்ரீராம் நேராக விஷயத்துக்கு வந்தான்.

ஏட்டுக்குக் கோபம் வந்துவிட்டது. ஆதிகால ரஜினியின் அலெக்ஸ்பாண்டியன் போல் குதிக்கத் தொடங்கினார். தொடங்கிய வேகத்தில் படாரென்று மயங்கி விழுந்தார்.

“ஓடுங்க.. ஓடிருங்க.. என்னாச்சு தெரியலே.. அவரு எழுந்ததும் நான் பேசிக்கிறேன்” என்று எங்களை முடுக்கினான் உக்கிராசலம். “செவ்வா நைட்டு மறந்துறாதிங்க”.

விரைந்தோம். “இப்பத்தான் மொதல் தடவையா போலீசை அடிச்சிருக்கேன்” என்றது பல்கொட்டி உடன் விரைந்தபடி.

      ளே இருக்காது என்று நினைத்து செவ்வாய் இரவு பத்து மணிக்கு கோவிலுக்கு வந்தோம். ஆண் பெண் பிள்ளைகள் என்று மக்கள் கூட்டம். உள்ளே அம்மனுக்கு பூ அலங்காரம். சாம்பிராணிப் புகை. வெளியே இரண்டு இடங்களில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். உக்கிராசலம் எங்களைப் பார்த்ததும் வெளியே வந்தான். “மன்னிச்சுக்குங்க.. அர்த்தஜாமக் கூழ் காய்ச்சணுமின்னு காலைல வந்து பணம் கொடுத்தாங்க. இல்லேன்னு சொல்ல முடியாது.. நேந்துக்கிட்ட சமாசாரம்..” என்றான்.

“ஏய்யா யோவ்.. எங்க கிட்ட பணம் வாங்கிட்டு ஜாமத்துல கூழ் ஊத்தவும் காசு வாங்கிட்டியா?” என்றேன் கடுப்பில்.

“அதில்லாம பேயாத்தா கூடாதுன்னுடிச்சு.. தலைப்பல் கிடைச்சதுமே பல்கொட்டி பழி வாங்கிடுமாம்.. எதும் செய்ய முடியாது..” என்றான் தீர்மானமாக. “அந்த ஏட்டு வேறே இங்கயே ரோந்து சுத்திட்டிருக்காரு.. பாருங்க”

“அடேய்.. நாளைக்கு அமாவாசை.. இன்னிக்கு எடுக்கலேனா பெருங்கேடு பெருங்கேடு” என்றான் ரமேஷ் பாலையா பாணியில்.

ஸ்ரீராம் எங்களைத் தனியாக வெளியே அழைத்துப் பேசியதும், “சரி உக்ரம்.. வந்ததோ வந்துட்டம்.. சும்மா ஒரு ரவுண்டு அடிச்சுட்டு நாங்களும் ஜாமக்கூழ் பூசைல கலந்துக்கறோம்.. எங்களுக்கு உள்ளாற எடம் போட்டு வை” என்றோம். பல்லில்லாமல் போவதில்லை என்று தீர்மானித்திருந்தோம்.

அங்கே இங்கே சுற்றி மெயின் ரோடு டீக்கடையில் மசாலா பால் வாங்கினோம். அகண்ட வாணலியில் சுண்டக்காய்ச்சிய பால் எடுத்து கிளாசில் ஊற்றி அதன் மேல் ஏடு போட்டு முந்திரி பாதாம் பிஸ்தா ஏலக்காய் பொடியைத் தூவிக் கொடுத்தார் டீ மாஸ்டர். மூன்று பேர் நான்கு பால் வாங்குவதையும் நாலாவது கிளாஸ் அந்தரத்தில் நிற்பதையும் பார்த்து எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர். மசாலா பாலை அனுபவித்துக் குடித்தோம். கோவிலுக்குத் திரும்பியபோது மணி இரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கோவில் வாயிலில் எங்களைப் பார்த்த ஏட்டு கையிலிருந்த லட்டியை சுழற்றிக் காட்டியபடி தலையசைத்தார்.

கூட்டத்துடன் கலந்து உள்ளே நுழைந்து பார்த்தோம். ஜாமக் கூழ் பூசை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

எங்களுக்காக பலிமேடை அருகே பரவலாக இடம் ஒதுக்கியிருந்தான் உக்கிராசலம். உட்கார்ந்தோம். பலிமேடை நடுவே அலங்காரங்களுக்கு இடையே துல்லியமாகத் தெரிந்தது தலைப்பல்.

நான் பல்கொட்டியைப் பார்த்தேன். தணிகாசலமும் பேயாத்தாவும் சொன்னது போல் ஒருவேளை தலைப்பல் கிடைத்ததும் பழிவாங்குமோ என்ற எண்ணம் அச்சமாகப் பரவத் தொடங்கியது.

பனிரெண்டு மணியாகிவிட்டது என்று சைகை செய்தான் ஸ்ரீராம்.

12◄ ►14



2017/08/04

பல்கொட்டிப் பேய்

12


11◄

        ல்கொட்டியைக் காணாது திகைத்தேன். காலருகே ஏதோ புசுபுசுவென்று உணர்ந்தேன். ஹோடல் ரூமில் ஏது மரவட்டை? ஒருவேளை பல்லியாக இருக்குமோ என்று அச்சத்தில் துள்ளினேன். துள்ளிய வேகத்தில் படுக்கையில் விழுந்தபோது கவனித்தேன். பல்கொட்டிப் பேய் நான் நின்றிருந்த இடத்தில் முழுதுமாக கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருந்தது. அரை நிமிடத்தில் இருநூறு நமஸ்காரம் செய்திருக்கும். “ஏய்.. என்ன இது.. கால்ல விழுந்திட்டிருக்கே? அதுவும் இத்தனை வேகமா?”

எழுந்து தரையில் உட்கார்ந்த பல்கொட்டி “என் தலைப்பல்லை நீ தான் எப்படியாவது மீட்டுக் குடுக்கணும்.. இந்த முப்பது வருஷமா நான் பட்ட கஷ்டம் ஒரு மனுசனுக்குக் கூட வரக்கூடாது.. அவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன்..” ஏறக்குறைய அழுதுவிட்டது. “என்னை இப்ப எந்தப் பேயும் மதிக்குறதில்லே.. காட்டேரிங்க கூட என்னைக் கண்டா வாய்ல கையப் பொத்திக்கிட்டு ஒதுங்கும்.. இப்ப பல்லிழந்த செல்லாப் பேயா அலையுறேன்…”

எனக்கே பாவமாகிவிட்டது. என்னதான் இருந்தாலும் முப்பது வருசத்துக்கு முந்தைய பழக்கம் இல்லையா? “பல்கொட்டி.." என்றேன் கருணை பொங்க. "இதப்பாரு.. அந்த தலைப்பல் யார் கிட்டே இருக்குனு கூடத் தெரியாதே? அந்த தணிகாசாலம் ஞாபகம் இருக்குதா? அந்தாளு எடுத்துட்டுப் போயிட்டாரு.”

“தெரியும்.. முப்பது வருசமா பாத்துட்டு இருக்கேன்ல? அம்மன் சிலைக்கு கீழே பூசை மேடையில பதிச்சு வச்சிருக்காரு”

“அப்ப எடுக்க வேண்டியது?”

“வாக்கு குடுத்திட்டேன் இல்லே? முப்பது வருசம் கழிச்சு வருவேன்னு. தொடமுடியாது”

“ஆமாம்.. பொல்லாத வாக்கு.. நீ எங்க ஊர் அரசியல்வாதிங்களைப் பாக்கலே?”

பல்கொட்டி நடுங்கியது. “ஐயோ.. அரசியல்வாதிங்களா.. இப்பல்லாம் கோழித்தலை காட்டேரிங்க கூட தமிழ்நாடுனா ஒரே ஓட்டமா ஓடுதுங்க.. நான் எம்மாத்திரம்?”

“அதென்ன கோழித்தலை காட்டேரி?”

“அந்தக் கதை இன்னொருக்கா சொல்றேன்.. ரத்தக்காட்டேரிக்கு மூத்த தலைமுறை… மின்னூறு மனுச வருசத்துக்கு ஒருக்கா எந்திரிக்கும்.. கண்ணு முளிச்ச எடமெல்லாம் காவுதான்.. அப்படித்தான் ஆறு மாசம் மின்னே சென்னைல மகாபலிபுரம் பக்கத்துல முளிச்சுக்கிச்சு.... சரி.. இனி ரத்த ரகளைதான்.. நாம இந்த சாக்குல தலைப்பல்லை ராவிக்குவம்னு நினைச்சு பின்னால போனா.. கோழித்தலை அலறி அடிச்சுனு ஓடுது.. என்னத்த சொல்ல..”

“ஏன்?”

“யாரு கண்டா என்னா நடக்குதோ தமிள்நாட்டுல.. கோழித்தலையே ஓடுறப்போ நாங்க என்ன சுத்திக்கிட்டா இருப்போம்? நாங்களும் மறைஞ்சுட்டோம். இப்பல்லாம் தமிழ்நாட்டுப் பக்கம் போவுறதுனாலே பேயுங்க பயப்படுதுங்க”

“அப்ப என்னதான் செய்யுறீங்க?”

“அந்தக் கொடுமையை ஏன் கேக்குற? வடநாட்டுல போய் முடி வெட்டுறோம்”

“களுத நீங்கதானா?” எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“எடுத்தவங்களே பல்லை வைக்கணும்.. உன் தம்பிக்குத்தான் அதிகாரம் இருக்குது.. பேய்ச் சாபம் உன் குடும்பத்துக்கு வேணாம்.. பல்லை எடுத்துக் குடுத்துறச் சொல்லு”

“இதப்பாரு பல்கொட்டி.. நானாச்சும் உனக்கு பயப்படுவேன்.. என் தம்பி ஸ்ரீராம் இப்ப பெரிய ஆளு.. கோளித்தலையே அவனுக்கு பயப்படும் வேணாப்பாரு.. நீ இன்னா ஜுஜுபி.. பேய்சாபம்னா பேயாட்டம் சிரிப்பான்.. உனக்கு இந்த ஜன்மத்துல பல் கிடைக்காது.. ஆமா, உனக்கு ஜென்மம் எல்லாம் உண்டா?”

பல்கொட்டி தலை குனிந்தது. “அப்பல்லாம் வெட்டு குத்து கொலை விபத்துனு அல்பாயுசா போயி பேயாவோம்.. இப்ப எல்லாம் மாறிடுச்சு.. அஞ்சாம்பு பெயிலு ப்ள்ஸ்டூ பெயிலு லவ் பெயிலு கடன் பாக்கி காலேஜுல இடம் இல்லே காவேரில தண்ணி இல்லே நாய்க்கு தலைவலி ஜல்லிக்கட்டு வெளாடலேனு எதுக்கெடுத்தாலும் திட்டம் போட்டு தூக்குல தொங்கிட்டு பேயா வந்து அலையுறாங்க.. பேஸ்புக்கு வாட்சப்புனு என்னென்னவோ தெரிஞ்சுகிட்டுவந்து கூத்தடிக்குதுங்க.. மிச்ச பேயுங்களும் அவங்களை கொண்டாடுதுங்க.. எங்க காலத்துல காட்டேரி கொள்ளிவாய் குட்டிசாத்தான் கொம்பேறினு பேரு வச்சுக்கிட்டோம்.. இப்ப தெர்மாகோல் பேய்னு ஒரு லேட்டஸ்டு வகை கேட்டிருக்கியா? தூங்குறப்ப மூச்சுக்காத்து வெளிய போவாம ஒரு தெர்மகோல் அட்டையை வச்சுக் கொல்லுமாம் குடாக்குங்க.. எல்லா முட்டாப் பேய்ங்களும் தெர்மகோல் அட்டையை கட்டிக்கிட்டு அலையுதுங்க. பேய்த்தொகை கணக்கு வேறே கூடிக்கிட்டே போவுது.. என்னிய மாதிரி பழம்பெரும் பேய்ங்களை யாரும் மதிக்குறதில்லே.. மனுசங்களும் மாறிட்டாங்க. சாமியும் பொய் பூதமும் பொய்யின்றாங்க.. அட பூதத்தையாவது நம்புவாங்கனு பார்த்தா..”

“சரி.. சரி புலம்பாதே.. இதப்பாரு.. எங்க நாலு பேர்ல ரகு போயிட்டான்.. ஒருவேளை அவன் உன்னாட்டம் பேயா இருந்தாலும் இருக்கலாம் பாத்துக்க.. ரமேஷ் பய எங்க இருக்கானு தெரியாது.. தேடிப்பாக்கணும்.. அதும் நீ திரும்பிட்டனு தெரிஞ்சா பேரை சுரேசுனு மாத்தி வச்சுக்கிட்டாலும் சொல்றதுக்கில்லே.. ஆக நானும் என் தம்பியும் தான்..”

“வர ஆடி அமாவாசைக்குள்ள நீங்க மூணு பேரும் கூட்டா வந்து தலைப்பல் சேக்கலினா பெரும் கேடு விளையும்”

“யாருக்கு உனக்கா? களுத பொறுமையா இரு.. எல்லாம் கிடைக்கும்.. சாபம் கீபம் கொடுத்துராத.. காலைல ரமேசு நம்பரத் தேடி போன் பண்ணுறேன்.. இப்ப அந்த ஓரமா போய் உக்காரு.. இல்லே வவ்வாலா தொங்கு” என்று படுத்தேன். பல்கொட்டிக்குப் பயப்படுவதா பரிதாபப்படுவதா என்ற குழப்பத்தில் தூங்கிவிட்டேன். ரமேஷ் என் கழுத்தை நெறிப்பதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

பல்கொட்டி மென்மையாகச் சிரித்துக் கொண்டிருந்தது. "நீ எனக்கு பயப்படாம போனினா கூட கனவுக்கு பயந்து ஆவணுமே? என் தலைப்பல் எடுத்துத் தரலின்னா உனக்கு தினம் இது போல கனவுதான்" என்றது.

11◄ ►13